ஜெயகாந்தன் -நீங்காத நினைவுகள்-1பிரின்ஸ் நீல்

image

“நினைவுகள் சாவதில்லை
நிலவுலகப் பாதையிலே”
     இன்று ஏப்ரல் 24’ஜெயகாந்தன் பிறந்த தினம்.ஒவ்வொரு ஆண்டும் தொலைபேசியில் ஜேகேவிற்கு வாழ்த்து தெரிவித்த எனக்கு இந்த ஆண்டு வெறுமையின் நாள்.
       ஜேகேயின் சஹ்ருதயர்களில் நானும் ஒருவன்.ஜவ்வாது மலை,ஜமுனாமரத்தூரில்  மேநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன்.
      1972ல செப்டம்பரில் பாரதி நினைவு தினத்தில் எனது சிறிய மலைக்கிராமப் பள்ளியில் தேசியக்கொடியேற்றி ஜேகே மாணவர்களிடையே உரையாற்றினார்.அன்று முதல் அவரின் நெருங்கிய நண்பர்களில் நானும் ஒருவனானேன்.நீல்,நீல் என என்னை அன்புடன் அழைப்பார்.என்னுடன் மட்டுமின்றி என் குடும்பத்தினரிடமும் நெருக்கம் காட்டினார்.
     சென்னையை விட்டு வெகு தொலைவில் உள்ள இம்மலைக்கு எத்தனையோ முறை வந்து தங்கியிருக்கிறார் என்றால் அவர் நட்பின் ஆழத்திற்கு எல்லை எது?
      எனக்கு மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வாய்பேச இயலா,நடமாட முடியாத நல்ல மனவளர்ச்சியுடனிருந்த ஸ்பென்சர் என்ற மகன் 23 வயது வரை வீட்டிலிருந்தான்.ஜெயகாந்தன் என் வீட்டிற்கு வருகை தரும்போதெல்லாம் அவனுடன் அதிக நேரம் செலவிட்டு மௌனத்திலேயே அவனுடன்  உறவாடிய காட்சிகள் மறக்க இயலாதவை!
         “நீல் இறைவன் உன்னால் தான் இவனைக் காப்பாற்ற முடியும் என்பதால் தான் உனக்கு இந்த சோதனையைக் கொடுத்திருக்கிறார்.மற்றபடி எங்களால் இந்த சோதனையைத் தாங்க முடியாது”என்பார்.
ஸ்பென்சர் மட்டுமின்றி எந்த லௌகிக விஷயங்களைப் பேசினாலும் தத்துவ ரீதியாக அற்புதமாகப் பேசுவார்.
     ஆழ்வார்ப்பேட்டை மடத்தில் அவர் “சபை”யில் எப்பொழுது சென்னை சென்றாலும் ஆஜராகிவிடுவேன்.எத்தனை தடவை சென்றாலும் “வாங்க நீல்”என்ற அவர் சிரிப்பே வரவேற்கும்.வீட்டில் அனைவரையும்,குறிப்பாக ஸ்பென்சரையும் பற்றி நினைவாக விசாரிப்பார்.
    1997ல் ஸ்பென்சர் திடீரென மறைந்த போது ‘ஆண்டவன் உன் பாரத்தை நீக்கிவிட்டான்”என ஆறுதலளித்தார்.
        ஜமுனாமரத்தூர் வனவிடுதி,காவலூர் வன ஓய்வு விடுதி,புதூர்நாடு இல்லம் ,என் சொந்தவீடு என்று எல்லா இடங்களிலும் அவர் தங்கி இருந்ததை மற்க்க இயலாது.
         எனது ஊரில் முகாமிடும்போதெல்லாம் நண்பர்கள் சூழத்தான் வருவார்.திருப்பத்தூர் நண்பர்கள் பி.ச.குப்புசாமி,தண்டபாணி,வெங்கடாசலம்,மாணிக்கம்,ருணாச்சலம்,ஆறுமுகம்,வையவன் போன்றவர்களும்,கே.எஸ்.அருணாச்சலம்,ஓவியர் ஆதிமூலம்,துரைராஜ் இன்னும் அநேக நண்பர்களுடன் முகாமிடுவார்.
      அவ்வாறு தங்கும்பொழுதுகளில் தனக்கென பிரத்யோகமாக எந்த வசதியையும் தேடிக்கொள்ள மாட்டார்.அவருக்கென அசைவ உணவு தனியாகத் தயாரித்தால் ,ஒருபோதும் தனித்து உண்ணமாட்டார்.எல்லோருக்கும் கொஞ்சம் கொஞ்சம் கொடுத்து பரிமாருங்கள் என்று கண்டிப்பாகச் சொல்லி விடுவார்.
     எந்த இடத்தில் சபை கூடினாலும் எல்லாரும் சமம் என்ற பொது உடமை சித்தாந்தத்தையே நிலைநாட்டுபவர்.
      நண்பர்களின் பிள்ளைகளின் திருமணத்திற்கு ஆர்வத்துடன் நண்பர்கள் பட்டாளமாகக் கலந்து கொள்வதில் ஜெயகாந்தனுக்கு விருப்பம் அதிகம்.நண்பர் பி.ச.குப்புசாமியின் மகன்,தண்டபாணியின் மகள்,ஆறுமுகத்தின் மகன் ஆகியோர் திருமணங்கள் திருப்பத்தூரிலும்,ஈரோட்டில் நண்பர் துரைராஜ் மகன்திருமணததிலும்,நான் ஜெயகாந்தனுடன் கலந்து கொண்டுள்ளேன்.
     எனது மூத்த மகள் பெப்ரீசியா திருமணத்திற்கு ஆம்பூரில்,மோனிகா மாறன் திருமணத்திற்கு வேலூரில்,இளைய மகள் சொர்ணப்ரியா திருமணத்திற்கு சென்னையில் ஜேகே கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கியதை நன்றியுடன் நினைவு கூறுகிறேன்.எனது மகன் ஞானதினகரன் திருமணத்தில் உடல்நலக்குறைவால் கலந்து கொள்ள இயலவில்லை என்றாலும் ஜெகெ வாழ்த்துகளை அனுப்பியது மறக்க இயலாதது.
       இதில் குறிப்பிடப்பட வேண்டியது அப்பயணங்
கள் எதற்கும் நான் எந்த செலவும் செய்யவில்லை.உள்ளன்புடன் அவர் சொந்த செலவில் உறவினர் திருமணங்கள் போல வந்தார்.
      அவர் நண்பர்களுக்கு காண்பிக்கும் அன்பிற்கு இணை எதுவுமில்லை.
                    நினைவுகள் தொடரும்
                       ஞா.பிரின்ஸ் நீல்
                          ஜமுனாமரத்தூர்.

மோனிகா மாறன்

Leave a comment